எல்லாம் காதல் மயம்.!

அன்புள்ள பிரியாவுக்கு,
உனக்கு இது நான் எழுதும் 22 வது கடிதம்.ஆம்,21 கடிதங்களை உன்னிடம் கொடுக்கவே இல்லை என்பது எனக்கும் என் பேனாவுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.நாம் காதலிக்க ஆரம்பித்து இன்று வரை ஆறு வருடங்கள்,மூன்று மாதம் ஆகின்றது.படிக்கும்போது அனைத்துப் பாடங்களையும் ஒரே அட்டம்ப்டில் தூக்குபவனையே ரசித்த பெண்களின் மத்தியில் "அரியரைத் தூக்குவதே அரிது" என்றிருந்த என்னை ஏன் காதலித்தாய்..? அன்று முதல் தேடிப் பார்க்கின்றேன், என்னிடம் உன்னை ஈர்த்தது எதுவென்று.எனக்கு மட்டும் தெரியவில்லை. நோட்புக்குகளில் நீ “பிரியா செந்தில்” என்றெழுதி மறைத்து வைத்திருந்ததைப் பார்க்கும் நேரமெல்லாம் மௌனமாக அழுதிருக்கின்றேன்.

இந்த ஆறு வருடங்களில்தான் எத்தனை ஊடல்கள்,சண்டைகள்,குடும்பச் சங்கடங்கள்...? அதனால்தான் முடிவெடுத்துவிட்டேன் உன்னை விட்டு பிரியலாம் என்று.எப்போது பார்த்தோம்.பழகினோம்.எல்லாம் இன்னும் என் நெஞ்சில் பசுமரத்தாணியாகவே இருக்கின்றது. மதுரையில் நாம் சுற்றாத இடங்கள் பாவம் செய்திருக்கக் கூடும்.அந்த நினைவுகள் போதும். அவற்றை தின்று விழுங்கிக் கொண்டே இருந்துவிடுவேன்.

உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியுமா..? என்ற‌ கேள்வி இருப்பின், அதற்கு 'இல்லை'என்பதுதான் எனது பதிலாக இருக்கும்.என்ன செய்ய,நான் கோழைதான். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்.? என நீ கேட்காவிட்டாலும் நான் என் பதிலைச் சொல்லிவிடுகின்றேன்.

பயம்தான். இனி நம் வாழ்க்கை என்னவாகும் என்கிற ஒரு இனம்புரியாத பயம்தான்.என் வீட்டிலோ நான் காதலை சொன்னாலும் சொல்லாவிடினும் ஒரே நிலைமைதான்.ரேசன்கார்டில் மட்டுமே என்வீட்டில் வாழ்கின்றேன். ஆனால், உன் வீட்டில் உன் அப்பாவோ சொந்தங்களோ இந்த ஜென்மத்தில் சம்மதிக்கமாட்டார்கள். உன் பெற்றோர்களைப் பழித்து, குற்ற உணர்ச்சியோடு வாழும் வாழ்வு எனக்கு பிடிக்கவில்லை.? நான் உன் பெற்றோரின் மனதை உடைக்க விரும்பவில்லை என்பதே பிரதான காரணம். நீ ஆயிரம் சமாதானங்கள் சொன்னாலும் இதுதான் என் பதில்.அது என்னவோ தெரியவில்லை,காதலிக்கும் போது இதைப் பற்றிய சிந்தனை வரவே இல்லை.நாமும் சினிமாக் காதலர்களைப் போல இருந்து விட்டோம்.வாழ்க்கைப் பற்றிய பயம் வரும்போதுதான் இப்படியெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது. பிரிந்தால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா..? எனில்,இந்த நானோசெகண்ட் வாழ்க்கையில் "எல்லாம் சரியாகி விடும்". இதை ஏனோ என்னால் உன்னிடம் நேரில் சொல்ல முடியவில்லை. அதனால்தான் இந்தக் கடிதம்.

இப்படிக்கு,
செந்தில் வேல்.

இப்படி ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு,சென்னையிலிருந்து பாண்டியனில் வரும் தன் காதலியான பிரியாவைப் பார்க்கச் சென்றான் செந்தில்.கோச்சிலிருந்து இறங்கும் அவள் கண்களின் தேடலுக்கு பதிலாக,அவள் முன் சென்று நின்றான்.அவனைப் பார்த்து அவள் விட்ட் ஒற்றைத்துளி கண்ணீரில்,அந்தக் கடிதத்திற்கு தன் பேன்ட் பாக்கெட்டிலேயே 22 வது முறையாக‌ கல்லறை வைத்தான்.

-♠ராஜூ.♠
6 Responses
  1. சந்தோசமா பதிவு போடலாம்ல..கொண்டாடுற நேரத்துல ஏன் இப்படியெல்லாம் பீல் பண்ண வைக்குறீங்க..


  2. ஃபீலிங்ஸ் மச்சி... சே ஏன் இப்பிடி காதல்ன்னு ஒன்றை கடவுள் படைத்தான்?


  3. லோகு Says:

    கலக்கிட்ட மாப்ள.. பழைய ஒயினா?


  4. இனி எல்லாம் சுகமே.....


  5. பிரமாதம் போங்க


  6. அய்ய்யொ - இப்படியும் எழுத வருமா - செந்திலு = ஒற்றைக் கண்ணீர்த் துளி - எங்கேயோ போய்ட்டே ராஜு